Saturday, February 12, 2011

மின்னல் வேகத்தில் அதிமுக. ஆமை வேகத்தில் திமுக

கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் விண்ணப்பம் என்று அ.தி.மு.க.வில் தேர்தல் பணிகள் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்க... ஸ்பெக்ட்ரம் ராசா கைதால் தி.மு.க.வில் தேர்தல் பணிகள் ஆமை வேகத்தில் அசைந்து கொண்டிருக்கிறது’ என்று நொந்து போயுள்ளனர் உடன்பிறப்புகள்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் தேர்தல் களத்தில் வியூகங்களை அமைத்துக் கொண்டிருந்தது தி.மு.க. அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பைப் பார்த்து எதிர்க்கட்சிகளே மிரண்டு போயின.

இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரம், ராசா கைது ஆகியவை அணிவகுக்க... தி.மு.க தரப்பில் தேர்தல் பணிகளுக்கு ‘பிரேக்’ போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வோ கடந்த 5-ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனு வாங்க ஆரம்பித்துவிட்டது.

‘வேட்பாளர்களாக போட்டியிட விண்ணப்பம் கொடுப்போர், தமிழகத்தில் 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரியில் 5 ஆயிரம் ரூபாயும் கட்ட வேண்டும்’ என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் பணத்தை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க... அ.தி.மு.க.வும், கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடப் போகும் தொகுதிகள் குறித்தும் ஜெ. முடிவு செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள்.

‘இந்த முறை குறைந்தது 30 புதுமுகங்களை வேட்பாளர்களாகக் களம் இறக்குவது’ என்று ஜெ. முடிவு செய்திருக்கிறாராம். இது தவிர, ‘பிரபலங்கள், கட்சியின் சீனியர்கள், தீவிர விசுவாசிகள் ஆகியோரிடம் ஜெயலலிதாவே நேரிடையாகப் பேசி, எவ்வளவு செலவு செய்யமுடியும்’ என்று கேட்டு வருவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் கூறுகிறார்கள்.

வரும் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு கோடி ரூபாயும்,
அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு 2 கோடி ரூபாயும் தேர்தல் செலவாகத் தரப்படும் என்கிறார்கள். தேர்தல் பணத்தை செலவு செய்வதைக் கண்காணிக்க தொகுதிவாரியாக குழு ஒன்றையும் ஜெ. அமைக்கப் போகிறாராம்.

இந்த விஷயங்கள் எல்லாம் தி.மு.க. தலைமைக்கும் தெரிந்தே இருக்கிறது. தி.மு.க. தரப்பில் கூறப்படும் இன்னொரு விஷயத்தையும் கட்சி நிர்வாகிகளிடம் ஜெ. மறுத்து வருகிறாராம்.

அ.தி.மு.க. ஓட்டுக்களை தே.மு.தி.க. பிரிப்பதால்... கூட்டுச் சேர்ந்தாலும் அ.தி.மு.க.வில் ஓட்டு சதவிகிதம் அதிகரிக்காது என்று தி.மு.க. பரப்பும் செய்தியையும் ஜெ. மறுக்கிறாராம்.

தே.மு.தி.க. கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க.வின் ஓட்டு சதவிகிதம் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், தி.மு.க.வின் ஓட்டு சதவிகிதம்தான் குறைந்து கொண்டே போகிறது என்று சுட்டிக்காட்டும் ஜெ., ‘‘2001-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. 31.44 சதவிகிதம் வாங்கியது. தே.மு.தி.க. ஆரம்பித்த பின்னர் 2006-ம் ஆண்டு தேர்தலில் 32.52 சதவிகிதம் ஓட்டுகள் வாங்கினோம். ஆனால் தி.மு.க., 2001-ம் ஆண்டு 30.92 சதவிகிதம் வாங்கியது. 2006-ல் 26.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆக, தி.மு.க. இழந்த 4.52 சதவீத ஓட்டை சேர்த்துத்தான் தே.மு.தி.க 8.32 சதவிகிதம் ஓட்டுக்களை பெற்றுள்ளது’’ என்று புள்ளிவிவரங்களைக் காட்டியதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அசந்து போயிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் காட்டும் ஆர்வம் ஆகியவற்றை ஒப்பிடும்போது, தி.மு.க.வில் இவை அனைத்துமே ‘மிஸ்ஸிங்’ என்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com