Saturday, February 12, 2011

கறுப்பு எம்.ஜி.ஆர் என்று கூறக்கூடாது. விஜயகாந்த்துக்கு ஜெயலலிதா போட்ட கண்டிஷன்


தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு புறம் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எனினும், விஜயகாந்துக்கு ஜெ. விதித்த 3 நிபந்தனைகளால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் கசிய ஆரம்பித்திருக்கிறது.

இது உண்மைதானா என்று அறிய தே.மு.தி.க. வட்டாரங்களில் பேசினோம்.

“தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் ஒரு மாற்றத்தை உருவாக்கவே தே.மு.தி.க. உதயமானது. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மாற்றாகவே விஜயகாந்தை மக்கள் நம்பிக்கையோடு பார்த்து வருகின்றனர்.

இருப்பினும், தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சி பல மட்டங்களிலும் தமிழகத்தை அழிவுப்பாதையை நோக்கிக் கொண்டு செல்வதை தமிழன் எவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டான்.


அந்த அடிப்படையில்தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், ‘தி.மு.க.வின் ஆணவ ஆட்சியை அகற்ற வேண்டும்’ என்பதற்காகவே, கூட்டணிக்கு ஓ.கே. சொன்னார் விஜயகாந்த்.

ஆனால், எங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்குரிய சீட்டுகளை ஒதுக்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையோடுதான் நாங்களும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள சம்மதித்தோம். ‘எங்கள் கட்சிக்கு துணைமுதல்வர் பதவி, 85 சீட்டுகள்’ என நாங்கள் பேச்சுவார்த்தையைத் துவக்கினோம்.

இறுதியில், 50-க்கு மேல் என்றால் சரி என்ற மனநிலைக்கு விஜயகாந்தும் தயாரானார். ஆனால், அ.தி.மு.க தரப்பில், 30-க்கு மேல் எங்களிடம்
‘சீட்’ இல்லை என்று பிடிவாதமாகக் கூறிவிட்டனர். ‘20 சீட்டுக்கும், 30 சீட்டுக்கும் நான் கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று இப்போதும் கேப்டன் உறுதியாக இருக்கிறார்.

நம்முடன் ஒரு பக்கம் பேசிக்கொண்டே, மறுபக்கம் பா.ம.க.வுடனும் அ.தி.மு.க. பேசி வருவதையும் விஜயகாந்த் ரசிக்கவில்லை. ‘பா.ம.க.வுடனான கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் நம்மை கழற்றி விட்டுவிடுவார்களோ’ என்ற அச்சமும் எங்களுக்கு இருக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு எதிராக வெளியான பத்திரிகை விளம்பரத்தால், அந்தப் பத்திரிகையையே விஜயகாந்த் பகைத்துக் கொண்டார். இன்று தமிழகம் முழுவதிலும் அந்தப் பத்திரிகை எங்கள் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருகிறது. எங்களில் சிலர் அந்தப் பத்திரிகைக்கும், விஜயகாந்துக்கும் சமரசம் செய்ய முன்வந்தனர். ‘கூட்டணிப் பேச்சு வார்த்தை பாதிக்கும்’ என்று அவர் இந்த முயற்சிக்கு உடன்படவில்லை.

கேப்டன் இந்த அளவுக்கு இறங்கி வந்த நிலையில், ஜெயலலிதா விதித்த நிபந்தனைகளைக் கேட்டு கேப்டன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

‘தே.மு.தி.க. விளம்பரங்களில் எம்.ஜி.ஆர். படம் இடம் பெறக்கூடாது. விஜயகாந்தை ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என சொல்லக்கூடாது. வருங்கால முதல்வர் விஜயகாந்த் என கூட்டணி மேடைகளில் பேசக்கூடாது’ என்பதுதான் ஜெயலலிதாவின் 3 நிபந்தனைகள்.

‘நம்மை யாரும், எதற்காகவும் நிர்ப்பந்திப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் எம்.ஜி.ஆர்.தான் என்னோட அரசியல் ‘ரோல் மாடல்’. அவரது பெயரை மறைத்து என்னால் அரசியல் செய்யமுடியாது’ என்று விஜயகாந்த் உறுதியாக இருக்கிறார். இரு கட்சிகளும் கூட்டணி உடன்பாடு ஏற்படுத்துவதற்கு இதுதான் தடையாக இருக்கிறது’’ என்றனர்.

தே.மு.தி.க.வின் இந்த நிலைப்பாடுகள் குறித்து அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.

“அ.தி.மு.க. என்பது வலுவான அடிமட்டத் தொண்டர்கள் பலமுள்ள கட்சியாகும். தி.மு.க. அரசின் மீதுள்ள மக்கள் கோபத்தில் இருப்பதும், ஏற்கெனவே உள்ள எங்கள் கூட்டணி, ஆட்சி அமைக்கத் தேவையான பலத்துடன் இருப்பதாலும் வேறு கட்சிகளைப் புதிதாகச் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.

இருப்பினும், ‘அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு ‘மெகா கூட்டணியை’ உருவாக்குங்கள் என நடுநிலையாளர்கள் அம்மாவிடம் சொன்னதை ஏற்றுத்தான் அவர் தே.மு.தி.க.வுடன் பேசவே ஒப்புக்கொண்டார்.

ஆனால், அவர்கள் தங்கள் சக்திக்கு அதிகமாக சீட்டுகளைக் கேட்டுப் பிடிவாதமாக இருப்பதால் தான் இழுபறி நீடித்து வருகிறது. இவர்களோடு பேசுவதால் நாங்கள் பா.ம.க.வுடன் பேசக்கூடாதா? விஜயகாந்துடன் உள்ளவர்களில் சிலர், தி.மு.க. ஆதரவு மனநிலையில் உள்ளதாகவும், அவர்கள் தான் அவரை உசுப்பேத்திவிட்டு கூட்டணிக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் அம்மாவுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

அ.தி.மு.க. தலைமையில் அமைவதுதான் வெற்றிக் கூட்டணி. இதில் இடம் பெற்றால் தான் விஜயகாந்துக்கு அரசியலில் எதிர்காலம் இருக்கும். அதை விட்டுவிட்டு அவர் மறுபடியும் தனியாக நின்றால், தி.மு.க.வின் தூண்டுதலால்தான் அரசுக்கு எதிராக உள்ள ஓட்டுக்களைப் பிரிக்க இவர் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று மக்களே நம்பிவிடுவார்கள்.

மற்றபடி எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் தலைவர் அ.தி.மு.க.வுக்கு மட்டுமே சொந்தமானவர். அவரது பெயரையும், படத்தையும் பயன்படுத்தும் தார்மீக உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு’’ என்றனர்.

இதற்கிடையே, 30 தொகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட கோடீஸ்வர வேட்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்களை இப்போதே களம் இறக்கி விட்டுள்ளாராம் விஜயகாந்த். கூட்டணி அமையாத பட்சத்தில் இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் அனைவரையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் லட்சியமாம்.

கூட்டணி முறியும் பட்சத்தில், தி.மு.க.வுக்கு உண்மையான மாற்று சக்தி தே.மு.தி.க.தான் என்பதை மக்களிடம் கொண்டு சென்று பிரசாரம் செய்யவும் இருக்கிறாராம் விஜயகாந்த்.

சேலம் மாநாட்டில் கூட்டணிக்கு ஆதரவாக கையைத் தூக்கிய தொண்டர்களை விஜயகாந்த் ஏமாற்றுவாரா...? அல்லது அவர்களின் உணர்வை ஏற்றுக்கொள்வாரா...? குழப்பத்தில் இருக்கிறார்கள் தே.மு.தி.க.வினர்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com