Wednesday, February 16, 2011

கொடிய வைரஸ் மூலம் நன்மையும் உண்டு- புதிய ஆய்வு!

 
மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வைரஸை பயனுள்ள விதத்தில் உபயோகிப்பதில் முக்கால் கிணறு தாண்டியிருக்கிறார்கள், விஞ்ஞானிகள். மனிதர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துபவை `மீசல்ஸ்’ வைரஸ்கள்.  எளிதாகத் தொற்றும் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் ஊடுருவினால் கடுமையான வலியுடன், சிவப்பு சிவப்பான புள்ளிகள் தோன்றும்.
 
ஆனால் தற்போது இந்த வைரஸைத்தான் நன்மை புரிவதாக மாற்றும் முனைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த வைரஸை புற்றுநோய்க்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேயோ கிளினிக் ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
 
மீசல்ஸ் வைரஸ்கள், தாங்கள் தாக்கும் செல்லுக்குள் எப்படி நுழைகின்றன, வெளியேறுகின்றன என்பதுதான் தங்கள் ஆய்வுக்கு அடிப்படை என்கின்றனர் இவர்கள். குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை மீசல்ஸ் வைரஸ்களை கொண்டு தாக்கி அழிக்க முயன்று வருகிறார்கள். அதற்காக இந்த வைரஸ்கள் செயல்படும் விதத்தை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறார்கள். இந்த வைரஸ்கள் ஒரு செல்லுக்குள் ஊடுருவுவதில் இரண்டு புரதங்கள் முக்கியமாகச் செயலாற்றுகின்றன என்று ஆரம்பகட்டமாகத் தெரியவந்திருக்கிறது. அவை குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. அந்த ஆய்வு முடியும்போது, புற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு முக்கியமான ஆயுதம் பிறந்திருக்கும் என்று உறுதி தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com