Sunday, February 13, 2011

இதயத்தில் மலரும் பூ காதல்


கண்கள் நான்கும் களவாடி இதயங்கள்
இடம் மாறி துடிக்கும் இதம் தரும்
இனிய ஸ்வரம் காதல் சொல்லிக்
கொள்ளாமலேயே உன் நினைவுகளை
மௌனமாய் இதயம் சுமக்கும்
சுகமான சுமை காதல்

இதயக் கதவை மூடியே வைத்திருந்தாலும்
யாரும் சொல்லாமல் யாருக்கும் சொல்லாமல்
உள்ளே நுழைவது காதல் உடலுக்குள் நுழைந்து
உயிருக்குள் கலந்து உறக்கத்தை உருக்குலைத்து
உணர்வோடு ஒன்றினையும் காதல்

யாரும் அறியா அன்பும் ஆசையுமாய்
உறங்கி கிடந்த மன ஓசைகளை
மெல்ல தட்டி எழுப்பும் மெல் இசை
காதல் உடலுக்குள் எங்கு உயிர் இருக்கிறதோ
உயிருக்குள் எங்கு காதல்
இருக்கின்றதோ இதுவரை யாரும்

அறியாதது காதல் இசையின்
மென்மையாய் இசை பாடி
மனதுள் இரத்த நரம்புகளை வருட
இதயத்தில் மலரும் உயிர் பூ காதல்...

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com