Tuesday, May 3, 2011

இஸ்லாமாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார்: ஒபாமா அறிவிப்பு

வாஷிங்டன்: வாஷிங்டன்: சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.

இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.

அதிபர் ஒபாமா மேலும் கூறுகையில், இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போடாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் உறுதிபடத் தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு இடத்தை அமெரிக்கப் படையினர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.

பின்லேடன் அங்கு தங்கியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்கு புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். இதையடுத்து சிறிய அமெரிக்கப் படைக் குழு அங்கு புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் இறுதியில் பின்லேடன் கொல்லப்பட்டார். பின்லேடனின் உடலை படையினர் கைப்பற்றினர் என்றார்.

டிஎன்ஏ பரிசோதனையின்படி பலியானது ஒசாமா தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்...

பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள ஒரு மேன்சனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த பெண்களும், குழந்தைகளும் மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம் சிக்கியுள்ளனர்.

பின்லேடன், அமெரிக்காவின் தேடுதல் நபர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத் தாக்குதல் உள்பட உலகெங்கும் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணகர்த்தாவாக, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் பின் லேடன்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com