Wednesday, December 29, 2010

காதல் மூடன் கவிதை.........

 
அம்மாவின் மார்புக்குள்
அப்பாவை தொட்டபடி
விளையாட்டுப் பொம்மையுடன்
தூங்குகிறேன்.
வெளியில்........
நான் இலைபோட்டுக் காப்பாற்றிய
மழைவெள்ளத்தில் நனைந்த எறும்பு
குளிருக்கு என்ன செய்யும்?
ஐயோ பாவம்!
எல்லாமே என் சொந்தம்
சொந்தங்கள் எல்லாமே எனக்காக
என்கிறது குழந்தை

எனக்குப் பசித்திருக்கும்
அவனுக்குப் பால் கொடுப்பேன்.
எனக்குத் தூக்கம் வரும்
அவனைத் தாலாட்டுவேன்.
தந்தைக்குச் சேமித்த நேரத்தையும்
அவனுக்குச் செலவு செய்வேன்
என்கிறாள் தாய்

என் வலிய தோள்களே
வலிபெறுமளவுக்கு சுமப்பேன்.
முடமான கால்களால்கூட
அவனைச் சுமந்து நடப்பேன்.
வீட்டுக்கொரு கொலுசுச் சத்தம் கூட்டி வந்த பின்பும்
கண்ணை இமைபோல அவனை நான் காப்பேன்.
என்கிறார் தந்தை.

என் தங்கை வடிவில்
எனக்கொரு மகள் உண்டு
அவளுக்கான
மெழுகுவர்த்தி ஒளி நான்
என்கிறான் அண்ணன்.

அவள் சிரிக்கும் போது
என் நெஞ்சுக் கூட்டில்
நெருப்பெரியும்.
முறைக்கும் போது
இருதயத்துக்குள்
மழை பொழியும்.
நினைக்கும் போது
முற்றிலுமாய்
தொலைந்து போவேன்
என்கிறான் அவன்.

உன்னைக் காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமல் இருக்கவும்
கற்றுத் தந்தது
உன் மீது நான் கொண்ட
காதல்
என்கிறாள் அவள்.

எனக்குத் தெரிந்த
அழகிய வார்த்தை
காதல்.
நான் எதை எழுதும் போதும்
எதிரில் வந்து
அருகில் அமர்வது
காதல்.
என்கிறான் கவிஞன்.

எனக்குத் தெரிந்த
அதி சக்தி வாய்ந்த
அணுகுண்டு
காதல்
என்கிறான் விஞ்ஞானி.

அவனுக்காக அவளும்
அவளுக்காக அவனும்
உயிரைக் கொடுத்ததால்
உலகில் உருவாகியது
காதல் காவியங்கள்.
தாயே
உனக்காக
ஒன்றல்ல நூறல்ல பல்லாயிரமாய்
அவள்களும் அவன்களுமாய் நாம்
உயிரைக் கொடுக்கிறோம்
உலகில் உயர்ந்தது
உன்னதமானது
உன்மீது நாம் கொண்ட காதல்
என்கிறான் போராளி

இடம் பொருள் ஏவலிற்கேற்ப
வடிவெடுக்கும் வல்லமை கொண்ட
உயிரி ஒவ்வொன்றினதும்
உயிர்ப்பான உணர்வே
காதல் என்கிறான்
என் நண்பன்

பல சமயம்
உள்ளே மிருகம் வெளியே கடவுள்
சில சமயம்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
என்கிறான் இன்னொருவன்

இதில் எல்லாருமாய் நான் இருக்கிறேன்
அல்லது இருக்க விரும்புகிறேன்.
காரணம்
காதலை நான் காதலிக்கிறேன்
காதலால் நான் காதலிக்கப்படுகிறேன்
என்கிறேன் நான்........


1 comment:

 
2010-2011 www.christosebastin.blogspot.com