Thursday, April 21, 2011

"மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது'' - இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

டெல்லி: 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது என மத்திய அரசு கூறியுள்ளது. மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையை எச்சரித்துள்ளது.


கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் நிருபர்களிடம் கூறுகையில், "4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல், யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கி உள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்காக காத்திருக்கிறோம். இப்போது போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த மரணம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. மேற்கொண்டு தகவல் கிடைக்குமா என்பதை அறிய, தமிழக அரசின் தலைமை செயலாளருடன் டெலிபோனில் பேசினேன். தமிழக அரசிடம் இருந்து விரிவான தகவலுக்காக காத்திருக்கிறோம்.

கடந்த சில மாதங்களாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஒருவேனை, தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக தெரிய வந்தால், அதுபற்றி இந்தியாவிடம்தான் தெரிவிக்க வேண்டும்.

அந்த மீனவர்களைப் பிடித்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தக்கூடாது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண, இந்திய-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நடக்கும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை", என்றார்.

மே 13ல் ஓட்டு எண்ணிக்கை: 17ம் தேதி ஆட்சி- கால அவகாசம் இல்லாததால் கட்சிகள் தவிப்பு

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்குப் பின் புதிய அரசு பதவியேற்க வெறும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அதற்குள் ஆட்சி அமைத்துவிட முடியுமா என்ற குழப்பத்திலும் கவலையிலும் திமுக, அதிமுக ஆகியவை ஆழ்ந்துள்ளன.


2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு 17-5-2006ம் தேதி காலை 9.30 மணிக்கு 13வது சட்டசபை கூடியது. உடனே புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்.

அரசியல் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் 14வது சட்டசபை 17-5-2011ம் தேதி காலை 9.30 மணிக்குள் கூடி புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு முன்பாக தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

முன்னதாக இப்போது ஆட்சியில் உள்ள அரசு தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க வேண்டும். அதன் பின்னர் அவர் வென்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.

இதையடுத்து தேர்தலில் வென்ற கட்சியின் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும். கூட்டணி  ஆட்சியாக இருந்தால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள் ஆளுநரிடம் தரப்பட வேண்டும்.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பதற்கான தகவல்கள் முறைப்படி அனுப்பப்பட்டு அனைவரும் சென்னைக்கு வரவேண்டும். யாராவது பதவி ஏற்க வரமுடியாத சூழ்நிலை இருந்தால் அவரது பதவியை முடக்கி வைப்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கலாம். இதற்கெல்லாமே மொத்தமே 4 நாள் தான் அவகாசம் உள்ளது.

கூட்டணி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையி்ல் திமுகவோ அல்லது அதிமுகவோ தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவது குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும். சில கட்சிகள் பதவிக்காக கூட்டணி மாறக் கூட வாய்ப்புள்ளது. துணை முதல்வர் , அமைச்சர் பதவிகள் என மோதல்கள் ஏற்பட்டால் உடனே இதில் தீர்வு கண்டு அரசை அமைத்துவிட முடியாது. இதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

ஆனால், தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13ம் தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13ம் தேதி தான் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பதால் 13ம் தேதி மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும்.

என்றாலும் அமைச்சரவை பதவி ஏற்பு, சட்டசபை கூடுதல், துணை சபாநாயகர் தேர்வு, எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு ஆகியவற்றுக்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கட்சிகள் தவிப்பில் உள்ளன.

தேர்தல் முடிவை அறிய ஒரு மாத அவகாசம் கொடுத்த தேர்தல் ஆணையம், அமைச்சரவை, சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு போன்ற முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கவில்லை.

திமுகவோ, அதிமுகவோ எந்தக் கட்சியாக இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 119 இடங்களில் போட்டியிட்டுள்ள திமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.

கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெற்றாலும், யார், யாருக்கு அமைச்சர் பதவி, யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதையெல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் இல்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை 160 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓரிரு நாளில் அதிமுக அரசு பதவியேற்கலாம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டால் அதிமுகவுக்கும் கால அவகாசம் தேவை.

தேமுதிக என்ற யானையை கட்டுப்படுத்தி ஆட்சிக் கட்டிலில் ஏறுவது அதிமுகவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

இது, தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம் ஆகும்.

எந்தக் கூட்டணி அதிக இடங்களை பெறுகிறதோ அந்தக் கூட்டணி பெரும்பான்மையை காட்டும் வகையில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை, கவர்னரிடம் அளிக்க வேண்டும். அவர் திருப்தியடைந்தால், அந்த கூட்டணியின் தலைமையை ஆட்சி அமைக்க அழைப்பார். ஆனால், ஆதரவு கடிதம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், எந்தக் கட்சி தனித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டுமென கெடு விதிப்பார்.

இதனால் கட்சிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதோடு நிம்மதியின்றி தவித்து வருகின்றன என்பதே நிஜம்

தகவல் பெறும் உரிமை: வேறு சிறந்த வழியிருக்கிறதா?

எந்த முடிவுகளை மேற்கொள்ளவும் முக்கியத் துணையாக நிற்பவை நம்பகமான தகவல்கள்தான். அரசாங்கமாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி பெறுகிற சரியான தகவல்களின் அடிப்படையிலேயே எந்த முடிவையும் எடுக்க முடியும்.


இந்திய அரசைப் பொறுத்தவரை, தங்களிடமுள்ள தகவல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது!.

அரசு எடுக்கும் முடிவுகளில் பொதுமக்களின் பங்களிப்பே இல்லாமல் போனதன் பின்னணி இதுதான்.

2005ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், அரசிடமிருந்து தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு ஓரளவு துணை புரிகிறது. ஆனால் தகவல்களைப் பெற இதுதான் சிறந்த வழியா? இதை விட சிறந்த, வெளிப்படைத் தன்மை கொண்ட வேறு வழிமுறை ஏதேனும் உள்ளதா?.

இது தொடர்பான உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். சிறந்த கருத்து தெரிவிப்போர் தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவர்.

ஐபிஎல் வீரர்களை திரும்ப அழைக்கும் விவகாரம்: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்து!

கொழும்பு: ஐபிஎல்லில் விளையாடி வரும் தங்கள் நாட்டு வீரர்களை திரும்ப அழைப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு.


இதன் மூலம் இலங்கை வீரர்கள் கண்டிப்பாக மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசும், கிரிக்கெட் வாரியமும் உறுதியாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தயாராவதற்காக ஐபிஎல்லில் விளையாடி வரும் வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. எனினும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினர் பேசி, டுவென்டி20 போட்டியில் மே 15-ம் தேதி வரையாவது விளையாட இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

எனினும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும், கிரிக்கெட் வாரியத்தினரும் இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக் குழுவினர் நேற்று நீண்ட நேரம் விவாதித்த பிறகு, இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னால் கேப்டன் குமார் சங்ககரா, மஹில ஜெயவர்த்தன மற்றும் இலங்கை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள திலகரத்ன தில்ஷான் உள்ளிட்ட 11 வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கை அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு உடனடியாக நாடு திரும்புவார்கள் எனத் தெரிகிறது.

இலங்கை கிரிக்கெட்டின் நலன்கள்தான் தனக்கு முக்கியம் எனத் தெரிவித்த அளுத்கமகே, இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கமாக எடுத்துக்கூறப்படும் என்றும் கூறியுள்ளார்.

மதுரை மேற்கு தொகுதி பணம் பட்டுவாடா-தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பினார் கலெக்டர் சகாயம்

மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் ரூ. 81 லட்சம் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்திய மதுரை கலெக்டர் சகாயம், தமிழக தேர்தல் அதிகாரிக்கு தனது அறிக்கையை அனுப்பியுள்ளார். இதனால் அந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


மதுரை மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பில் ரூ.81 லட்சம் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணம் சிக்கியதை அடுத்து அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இந் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சகாயத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மேற்கு தொகுதியில் விசாரணை நடத்திய கலெக்டர் சகாயம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு தனது 3 பக்க அறிக்கையை அனுப்பினார்.

இது தொடர்பான ஆவணங்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சகாயம் எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை என்று தெரிகிறது.

ஆனாலும் அவர் அனுப்பிய அறிக்கை மற்றும் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். பணம் பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானால் மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது மதுரை மேற்கு தொகுதியின் தேர்தல் முடிவு நிறுத்திவைக்கப்படலாம்.
அல்லது தேர்தலை ரத்து செய்து விட்டு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையின் 10 தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனைகள் நடத்தி ரூ.4 கோடி பறிமுதல் செய்தனர்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரி ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த ஒரு காரை சோதனையிட்டபோது சிக்கிய ஒரு டைரியில் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 4 வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் எழுதப்பட்டிருந்தன.

ரூ.81.20 லட்சம் வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. 65வது வார்டுக்கு ரூ.16.35 லட்சம், 66வது வார்டுக்கு ரூ.18.96 லட்சம், 67வது வார்டுக்கு ரூ.21.11 லட்சம், 69வது வார்டுக்கு ரூ.24.41 லட்சம் தரப்பட்டுள்ளதாக அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த டைரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழக தேர்தல் கமிஷனும் சகாயத்திடம் அறிக்கை கோரியது என்பது நினைவுகூறத்தக்கது

இப்போது நொய்டா நில சர்ச்சையில் 'லோக் பால்' சாந்தி பூஷண்!

டெல்லி: ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா வரைவுக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், இப்போது நில விவகாரத்தில் மாட்டியுள்ளர்.


'உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சில கோடிகள் கொடுத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்' என்று அவர் கூறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சிடியும் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நொய்டா அருகே 10,000 சதுர அடி நிலத்தை தனது மகன் ஜெயந்தின் பெயரில் அம் மாநில முதல்வர் மாயாவதியின் உதவியால் சாந்தி பூஷண் அடிமாட்டு விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், இதை சாந்தி பூஷண் மறுத்துள்ளார். என்னை லோக்பால் குழுவிலிருந்து நீக்க அடுத்தடுத்து பொய்யான புகார்களை சில சக்தி வாய்ந்த நபர்கள் கிளப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனக்கு ஒதுக்கப்பட்ட நிலம் முதல்வர் மாயாவதியின் கோட்டாவிலிருந்து வரவில்லை. அதை நான் முறைப்படி விண்ணப்பித்து வாங்கினேன். சரியாகச் சொன்னால் அந்த நிலம் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை என்றார்.

இந் நிலையில் பூஷணுக்கு சிக்கலை உருவாக்கியுள்ள சிடியை வெளியிட்டதாகக் கருதப்படும் அமர் சிங், அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சிடியை நான் வெளியிடவில்லை. ஆனால், அதில் நீதிபதிகளை விலைக்கு வாங்கலாம் என்று கூறியது சாந்தி பூஷண் தான் என்பது மட்டும் நிச்சயம். அது தனது குரல் இல்லை என்று சாந்தி பூஷண் நிரூபிக்கட்டும் என்றார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீடா பஹுகுண ஜோஷி டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், லோக்பால் மசோதாவை கொண்டு வர சமூக சேவகர் அண்ணா ஹசாரா முயற்சி எடுத்து வருவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அதன் வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள சாந்தி பூஷண், அவரது மகன் பிரசாந்த் பூஷண் இருவரும் தங்கள் மீதான புகார்களுக்கு முதலில் பதில் தெரிவிக்க வேண்டும்.
நொய்டாவில் முதல்வர் மாயாவதியின் சிலைகள் கொண்ட பூங்கா அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக சாந்தி பூஷண் ஆஜராகி வந்தார். இந்நிலையில், அவருக்கும் அவரது மகனுக்கும் நொய்டாவில் 10,000 சதுர அடி பரப்பளவு உள்ள பண்ணை வீட்டுக்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது லஞ்சம் இல்லாமல் வேறு என்ன. இதுகுறித்து சாந்தி பூஷண் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இந் நிலையி்ல் லோக்பால் மசோதாவை சீர்குலைக்க அமர் சிங் மூலமாக அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி கெடுத்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது திமுகவினர் தாக்குதல்-ஜெயலலிதா

சென்னை: பொதுத்தேர்தலின் போது, அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் செயல்பட்டனர் என்பதற்காக, நடிகர் விஜய் வீட்டினை திமுகவினர் நள்ளிரவில் தாக்கியுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக் காலமாக கொலை, கொள்ளைகள் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை 18.4.2011 அதிகாலை ஒரு மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதேபோன்று, மதுரை மாவட்டம், உச்சபரம்புமேடு பகுதியில் டீக்கடை நடத்தி வந்த சந்துரு என்பவரை திமுக கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளது.

மதுரையில் மட்டும் கடந்த 15 நாட்களில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதே போல், சென்னை கல்லூரி மாணவர் ஒருவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சாலைமறியல் நடத்திய மாணவ- மாணவியர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலின் போது, அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் செயல்பட்டனர் என்பதற்காக, நடிகர் விஜய் வீட்டினை திமுகவினர் நள்ளிரவில் தாக்கியுள்ளனர். இதே போன்று, சென்னையை அடுத்த நெற்குன்றம் பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவர் மர்மக்கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் பணியாற்றியதன் காரணமாக, தேமுதிக மாவட்டப் பொருளாளர் கேசவன் மீது திமுக கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த கேசவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவற்றின் உச்சகட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மும்தாஜ் என்பவர் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திமுகவைச் சேர்ந்த கல்யாணபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முரளீதரன் தனது வாகனத்திற்கு, மும்தாஜ் வழி விட மறுக்கிறார் என்று தெரிவித்து, அவரையும், அவரது மகனையும் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறை உதவி ஆய்வாளர் மும்தாஜ் மற்றும் அவரது மகன் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது. திமுகவிற்கு சாதகமாக காவல் துறை செயல்படுவதை கண்டித்து, காவல்துறை உதவி ஆய்வாளர் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்துள்ளதாக தற்போது கூறப்படுகிறது.

காவல் துறை உதவி ஆய்வாளருக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள். தற்போது திமுகவினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபட்டதாகத் தெரியவில்லை. குற்றவாளிகளை போலீசார் தேடிக் கொண்டே இருக்கின்றனர்.

வாக்குப்பதிவு முடிந்து 6 நாட்கள் முடிவதற்குள்ளேயே இந்த நிலைமை என்றால், வாக்கு எண்ணிக்கை நாள் வருவதற்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பீதியில் மக்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அரசை வைத்துக்கொண்டு, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை எப்படி நடத்தப் போகிறதோ என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. தமிழக மக்கள் மனதில் உள்ள ஐயப்பாடுகளை களையும் வகையில், உறுதியான, திடமான முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடுக்கு இரட்டை ஆயுள் உறுதி-உச்ச நீதிமன்றம்

டெல்லி: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழ‌க்‌கி‌‌ல் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு வழங்கப்பட்ட இர‌ட்டை ஆ‌யு‌ள் த‌ண்டனை ர‌த்து செ‌ய்த செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌த்‌தின‌் ‌தீ‌ர்‌ப்பை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்துள்ளது.


வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

‌செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌‌ர் பொ‌ன்னுசா‌மி‌‌யி‌ன் மக‌ன் நாவரசு. இவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர்.

விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான் டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார்.

ஜான் டேவிட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சென்னை தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர்.

இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டேவிட் தரப்பு அப்பீல் செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர்.

ஜா‌ன் டே‌வி‌ட்டின் இந்த ‌விடுதலையை எ‌‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த மனுவை ‌விசா‌‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌ ‌நீ‌திப‌திக‌ள் முகு‌ந்த‌ம் ஷ‌ர்மா, அ‌னி‌ல் தபே ஆ‌கியோ‌ர் இ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

மாணவ‌ர் நாவரசு கொலை வழ‌க்‌கு விசாரணையில் செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்றத்தின் செய‌ல்பாடு குறித்து அ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ ‌‌நீ‌திப‌திக‌ள், ஜா‌ன் டே‌வி‌ட்‌டு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட இர‌‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை செ‌ல்லு‌ம் எ‌ன்று தீர்ப்பளித்தனர்.

வழ‌க்கை ச‌ரியாக ‌விசா‌ரி‌க்காம‌‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு இ‌‌ட்டை ஆயுளை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்ததை ஏ‌ற்க முடியாது எ‌ன்று‌ம் ‌‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

மேலும் ஜா‌ன் டே‌வி‌‌ட் உடனடியாக கடலூர் சிறை அதிகாரி முன் சரணடைய வே‌ண்டு‌ம் எ‌ன்று்ம் உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

 
2010-2011 www.christosebastin.blogspot.com