Monday, February 14, 2011

பூசணிக்காய் புளிக் கூட்டு


இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது.

தேவையான பொருள்கள்:


பூசணிக்காய் – 1/2 கிலோ
மஞ்சள் பட்டாணி – 1/4 கப்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 1/2 கப்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 3, 4
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா – 1/2 டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

* ஊறவைத்த பட்டாணியையும், துவரம் பருப்பையும் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
* பூசணிக்காயை, தோல், குடல் பகுதி நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
* ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியாவை பொன்னிறமாக வறுத்து, தேங்காயுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த பட்டாணி, நறுக்கிய பூசணிக்காயைச் சேர்க்கவும்.
* புளி நீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நிதானமான தீயில் வேகவைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறிவிடவும்.
* காய் வெந்ததும், அரைத்த விழுது, துவரம் பருப்பு சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து, மேலும் 2, 3 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு, சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
* நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.

* கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற நாட்டுக் காய்களிலும் இந்தக் கூட்டை செய்யலாம்.

* இதில் பட்டாணி இல்லாமல் வெள்ளைக் கொத்துக்கடலை, தட்டைப் பயறு வகைகளும் அந்தந்த காய்களுக்கு ஏற்றமாதிரி உபயோகிக்கலாம். எந்தப் பயறுமே ஊறவைத்து தயாராக இல்லையென்றாலும் கடலைப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, காயோடு சேர்த்து வேகவிடலாம்.

* புளி மிகக் குறைவாகவே சேர்க்கவேண்டும். குழம்பு ரசத்திற்கு கரைத்து வைத்திருப்பதில் தெளிந்து மேலாக இருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டாலும் மெனக்கெடத் தேவை இல்லை. பக்கத்தில் செய்துவைத்திருக்கும் ரசத்தின் தெளிவை மேலாக இரண்டு கரண்டி எடுத்துவிட்டுக் கொள்ளலாம். இது உண்மையிலேயே சுவையாக இருக்கும். யாராவது, “எப்டி இப்படி நீர்ப்புளியா விட்டு திட்டமா செஞ்சிருக்க?” என்று கேட்டால், ரகசியத்தைச் சொல்லாமல், ‘நானெல்லாம் பொறவிலயே அப்படித்தான்’ மாதிரி கெத்தாக இருந்துவிடவேண்டியது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com