Sunday, March 6, 2011

வருண் காந்தி திருமணம்: ராகுல் பங்கேற்பு!

வாரணாசி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் சஞ்சய் காந்தி - மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்திக்கு நாளை திருமணம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் காந்தி எம்பி பங்கேற்கிறார்.

மணமகளின் பெயர் யாமினி. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பேஷன் டிசைனர் இவர்.
இவர்களது திருமணம் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி காமகோடீசுவரர் அனுமார் கோவிலில் நாளை காலை நடக்கிறது.

திருமணத்தில் பாரதீய ஜனதா தலைவர்கள் பல்வேறு கட்சி மற்றும் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். வருண் காந்தியின் பெரியப்பா மகனான ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் திருமணத்தில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்புடன் திருமண விழா நடக்கிறது. வருண்காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மதவாதக் கருத்துக்களை கூறினார். இதனால் அவருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது.

எனவே அவருடைய திருமணத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வருவதாலும் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். வருண்காந்தி தனது பெரியம்மா சோனியா காந்தியை நேரில் சந்தித்து திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனாலும் சோனியா திருமணத்துக்கு வருவது குறித்து இதுவரை தகவல் இல்லை.

சோனியா, மேனகா இடையே உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகு இருவரும் நேரில் சந்தித்ததே கிடையாது. எனவே திருமணத்துக்கு சோனியா வரமாட்டார் என்றே கருதப்படுகிறது.

வரவேற்பு ரத்து:

இதற்கிடையே, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருண் காந்தி - யாமினி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வருணின் பாட்டி அம்தேஷ்வர் ஆனந்த் மரணம் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் திருமணம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் மேனகா காந்தி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com